Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

குடும்ப தகராறில் விபரீதம் - 3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை :

வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (23). இவர்களுக்கு திருமணமாகி அக்சயா (7), நந்தகுமார் (5), 6 மாதம் ஆண் குழந்தை இருந்தது. கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தினசரி மதுபோதையில் வீட்டுக்கு வரும் தினேஷ்குமார் மனைவியிடம் தகராறில் ஈடு பட்டு வந்துள்ளார்.

இதனால், மன முடைந்த ஜீவிதா நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில், ஜீவிதாவின் வீட்டுக்கு அவரது சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் நேற்று மாலை சென்றுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகளை கொன்று ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பான தகவலின்பேரில் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x