Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

ஆவடியில் பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நூலகம் : தொகுதி அமைச்சர், முதல்வர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காந்தி சிலை அருகில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளைநூலகம், கட்டிடம் சேதம் அடைந்ததால் தற்காலிகமாக வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது.

இந்த நூலகத்துக்கு சொந்தக்கட்டிடம் கட்டுவதற்கு ஆவடி-பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள சர்வே எண்.162-ல் அரசு புறம்போக்கு நிலம் 30 சென்ட் ஒதுக்க தீர்மானித்து, ஆவடி நகரியக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த 30 சென்ட் நிலம் நூலகத்துக்கும், மீதியுள்ள இடம் தாய்சேய் நலக் காப்பகம் அமைப்பதற்கும் ஒதுக்கக் கோரி நகராட்சி சார்பில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் கிராமநிர்வாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய இடத்தை பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

இதற்கிடையே, தற்போது நூலகம் செயல்பட்டு வரும் இடத்துக்கு எதிரே, உயர்நிலைப் பள்ளி எதிரில் 0.08 சென்ட் நிலம் வீட்டுவசதி வாரியத்தால் நூலகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், குப்பைக் கொட்டும் இடமாக மாறி விட்டது.

முழு நேர நூலகமாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நூலகத்தில் தற்போது 6 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 50 பேர் புரவலர்களாக உள்ளனர். பள்ளி மாணவர்கள், மகளிர், முதியோர், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என தினசரி 200-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் இந்த நூலகத்தில் அமர்ந்து படிக்க 20 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அத்துடன், பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவதால், மழைக்காலத்தில் மழைநீர் கசிந்து நூல்கள் பாழாகும் நிலை உள்ளது.

முதல் மாடியில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நூலகத்துக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த வணிக வளாகத்தில் கடைகள் ஏதும்இல்லாததால் மாலை 6 மணிக்குமேல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், நூலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களும், பெண் வாசகர்களும் அச்சத்துடன் இருக்கும் சூழ்நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில்ஆவடி நகராட்சி நூலகவரியாக ரூ.6.24 கோடிவசூலித்து நூலக துறையிடம் வழங்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டுநூலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை வாங்க, மாவட்ட நூலக ஆணைக் குழு தயாராக உள்ளது.

இந்த வளாகத்தில் ஒரு மத வழிபாட்டு தலம் அமைப்பதற்காக ஒரு சதுர அடி ரூ.92-க்கு, வீட்டுவசதி வாரியம் விற்பனை செய்தது. அதே விலைக்கு இடத்தை தருமாறு நூலக ஆணைக்குழு கூறியுள்ளது. நூலகத்தில் புரவலர்களாகஉள்ளவர்களே அந்த விலையில் நிலத்தை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், தற்போதைய சந்தை மதிப்புக்குத்தான் விற்பனை செய்யப்படும் என வீட்டுவசதி வாரியம்கூறுவதால், இதுவரை இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டவில்லை.

கையில் பணம் இருந்தும் நூலகத்துக்கென இதுவரை சொந்தக் கட்டிடம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு ஆவடி தொகுதி அமைச்சர் சா.மு.நாசரும், தமிழகமுதல்வரும் தீர்வு காண வேண்டும் என வாசகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x