Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

சுகாதார மதிப்பீடு சான்றிதழ் பெறும் வகையில் - அங்கன்வாடி மையங்கள் சுகாதாரமாக செயல்பட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுரை :

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார மதிப்பீடு சான்றிதழ் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என பணியாளர் களுக்கு அறிவுரை வழங்கியதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது,சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சமைப்பதற்கு முன் பாத்திரங்களை வெந்நீரால் சுத்தம் செய்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களின் காலாவதியாகும் தன்மைஅறிந்து, முன்கூட்டியே பயன்படுத்த வேண்டும். உணவுக்கு பயன்படுத்தப்படும் முட்டைகள் நல்ல நிலையில் உள்ளதா என நீரில் பரிசோதித்து, உபயோகிக்க வேண்டும். உணவுப் பொருட்கள் சேமிப்பு அறைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் புழு, பூச்சிகள்புகாத வகையிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாகவும், காய்ச்சி வடிகட்டிய குடிநீராகவும் இருக்க வேண்டும்.

உணவு சமைக்கும் பணியாளர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தைகள் நல மையமும், உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் பதிவுச் சான்றை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது ‘‘திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை மூலம், சேடபாளையம், ராயர்பாளையம், வடுகபாளையம், பனப்பாளையம் ஆகிய 4 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்தியக்குழுவினர் மேற்கண்ட மையங்களில் ஆய்வு செய்து, இந்த சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும் சில மையங்கள் இந்த சான்றிதழ் பெற வழிகாட்டி உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x