பிரசவத்தின்போது அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு : சிவகங்கையில் தனியார் மருத்துவமனையை கண்டித்து மறியல்

சிவகங்கையில் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பாரதியின் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள். (உள்படம்) பாரதி
சிவகங்கையில் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பாரதியின் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள். (உள்படம்) பாரதி
Updated on
1 min read

சிவகங்கை தனியார் மருத்துவ மனையில் பிரசவத்தின்போது அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே மானாகுடியைச் சேர்ந்தவர் பாரதி (30). கோமாளிப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது கணவர் ராஜ்குமார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசுப் பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பாரதி 2-வது பிரசவத்துக்காக நேற்று முன்தினம் இரவு சிவகங்கை தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் பாரதி திடீரென உயிரிழந்தார். மருத்துவரின் கவனக்குறைவால்தான் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதற்கிடையே, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பாரதியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதியின் உறவினர்கள், ஆசிரியர்கள் அம்பேத்கர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டாட்சியர் முத்துக்கழுவன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் இளையான்குடி, மானாமதுரை சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in