Published : 22 Sep 2021 03:06 AM
Last Updated : 22 Sep 2021 03:06 AM

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தியும் பயனில்லை : பிற பகுதியினருக்கு சிவகங்கையில் பொருட்கள் வழங்க மறுப்பு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், சிவகங்கையில் பிற பகுதி கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

புலம்பெயரும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, இத்திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்.1 முதல் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் 2021 ஜூலை 1-ம் தேதிதான் முழுமையாக அமலுக்கு வந்தது. அதன்படி பிற மாநிலத்தவர், பிற மாவட்டத்தினர் என எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், விரும்பிய ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக விற்பனையாளர்கள் பிற பகுதியினருக்கு வழங்கும் அளவுக்கு ஏற்ப, கூடுதல் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிவகங்கை தெப்பக்குளம் அருகேயுள்ள ரேஷன்கடையில் பிற பகுதியினருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது. இதேபோல் நகரில் பெரும்பாலான ரேஷன்கடைகளில் பிற பகுதியினருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழங்கல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்துக்காகத் தான் கடைகளுக்கு ஒதுக்கீட்டை விட கூடுதலான அரிசி வழங்கப்படுகிறது. மற்ற பொருட்களையும் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். இதனால் பிற பகுதியினருக்கு பொருட்களை மறுக்கக் கூடாது என ரேஷன்கடை விற்பனையாளர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்து விட்டோம். இதுகுறித்து புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.' இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x