Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ,000 மாணவர்களுக்கு - பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டடு, 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண் மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் விவரங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த ஜூலை 19-ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 9,053 மாணவர்கள், 10,999 மாணவிகள் என மொத்தம் 20,052 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களிடமிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர்.

பிளஸ் 2 கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணிகளும் பள்ளிகளில் நடைபெற்றது.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் வசதிகள் செய்யப் பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x