Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

போகனப்பள்ளியில் பாதாள சாக்கடை திட்டம் : மக்களிடம் குறைகேட்ட கிருஷ்ணகிரி எம்எல்ஏ உறுதி

போகனப்பள்ளியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கிருஷ்ணகிரி எம்எல்ஏ உறுதியளித்தார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் போகனப்பள்ளியில் எம்எல்ஏ அசோக்குமார் (அதிமுக) பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

போகனப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஊரைவிட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி உள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டியது உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் சாலையைக்கடக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, போகனப்பள்ளியில் முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அரசு தொடக்கப்பள்ளியைக் கட்டித்தர வேண்டும். போகனப்பள்ளியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும்.ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அங்கு தரைமட்ட குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.கடந்த 6 மாதங்களாக 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வரவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும்.போகனப்பள்ளி கிராமத்தின் நடுவில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துத்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. மனுவை பெற்ற எம்எல்ஏ அசோக்குமார் கூறியதாவது:

அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்படும். குடிநீர் கிடைக்காத பகுதியில் உடனே குடிநீர் தொட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x