Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க ஆட்சேபணை தெரிவிக்க - விவசாயிகளுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வேண்டுகோள் :

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களின் வழியாக எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக தங்களது ஆட்சேபணையை விவசாயிகள் செப்.24-ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு கடந்த 3-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களின் வழியாக எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எண்ணெய் எரிவாயு கிணறுகளை இனி அமைக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக எண்ணெய் எரிவாயு குழாய்களை அமைக்க முயற்சிப்பது ஆட்சேபணைக்குரியது. பெட்ரோலியம் மற்றும் கனிமம் சட்டம் 1962 ஐ மாநில அரசுகள் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை உள்ளது. சட்டத்தை திருத்தும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமல் இந்த குழாய்கள் பதிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் செப்.24-ம் தேதிக்குள் ‘‘பாலாம்பாள் சுப்பிரமணியன் தெரு, விவேகானந்தா நகர், விழுப்புரம்்’’ என்ற முகவரியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பைப் லைன் அமைப்பு பிரிவு அதிகாரியான மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பான ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x