Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் - மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் : நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு தேடிச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வாகனத்தை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி/கோவில்பட்டி

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புஉள்ளிட்ட தோற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.08.2021-ல் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாரு தலைமை வகித்தார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தோற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடிச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மொத்தம் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட தோற்றா நோய் சிகிச்சைக்கு மொத்தம் 6,897 பேர் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்வதும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக கள அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 35 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 37 சுகாதார செவிலியர்கள், 2 இயன்முறை மருத்துவர்கள், 2 நோய் ஆதரவுச் செவிலியர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினரின் செயல்பாடுகளை பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் கண்காணித்து வழிநடத்துவார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களும் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் தெற்கு பகுதியில் உள்ள கணேஷ் நகர், மடத்தூர் மற்றும் முள்ளக்காடு ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியிலும் விரைவில் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கெனவேபரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயது், அதற்கு மேலும் உள்ளவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று வழங்குவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x