தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக - ஒருநபர் ஆணையத்தின் 30-வது கட்ட விசாரணை தொடக்கம் : 121 பேர் ஆஜராக சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக -  ஒருநபர் ஆணையத்தின்  30-வது கட்ட விசாரணை தொடக்கம் :   121 பேர் ஆஜராக சம்மன்
Updated on
1 min read

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 30-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணையத்தின் சார்பில் ஏற்கெனவே 29 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள் என இதுவரை 1,209 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 863 பேர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை 1,140 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆணையத்தின் 30-வது கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்இந்த விசாரணையில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஸ்டெர்லைட் குடியிருப்பில் பாதுகாப்பில் இருந்த போலீஸார், வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்த ஸ்டெர்லைட் குடியிருப்பு வாசிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்ததாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போலீஸார் உட்பட 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று மட்டும் 12 பேரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை வரும் 23-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in