விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி :

பலத்த  பாதுகாப்புடன் பேரறிவாளனை விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர்.
பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர்.
Updated on
1 min read

பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்ட பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வீட்டில் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சை பெற அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அதன்பேரில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி யுள்ளார். மேலும், அவர் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தொடர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார்.

இதற்காக, பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தனது தாயார் அற்புதம்மாளுடன் நேற்று வந்தார். அங்கு பேரறிவாளனுக்கு மருத்துவக் குழுவினர் உரிய பரிசோதனை செய்தனர்.

பரிசோதனைக்குப் பிறகு, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையொட்டி, அந்த மருத்துவமனையின் முன்பு விழுப்புரம் டிஎஸ்பி பழனிசாமி தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in