Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

திருமுருகன்பூண்டி அருகே - பாறைக்குழியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு :

திருமுருகன்பூண்டி பேரூராட்சிஅம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை மாநகராட்சி வாகனங்களை சிறை பிடித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2 ஆகிய இரு மண்டலங்களை சேர்ந்த 30 வார்டுகளுக்கான குப்பையை, அம்மாபாளையம் பாறைக்குழியில் கொட்டுவதற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரண்டு நாட்கள் மட்டும் குப்பை கொட்ட முடிவெடுக்கப்பட்டது.

நேற்று காலை வழக்கம் போல 8.30 மணிக்கு குப்பையைநிரப்பிக்கொண்டு அம்மாபாளையம் பழநியப்பா நகர் பகுதிக்கு மாநகராட்சியை சேர்ந்த 10 வாகனங்கள் சென்றன. அப்போது,பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாகனங்களை சிறைபிடித்தனர். பேச்சுவார்த்தையின்படி, இரண்டுநாட்கள் மட்டுமே குப்பை கொட்ட அனுமதிக்கப்படும் என மக்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்களுக்கு பின் அங்குள்ள பாறைக்குழியிலேயே குப்பையை கொட்டி விட்டு வாகனங்கள் திரும்பிச்சென்றன.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது ‘‘திருப்பூர் மாநகராட்சியில் அள்ளப்படும் குப்பையை, தொடர்பே இல்லாத திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலர்கள் கூறும்போது ‘‘அம்மாபாளையம் பகுதியில் 2 நாட்கள் மட்டும் குப்பை கொட்ட அனுமதிக்கப்படுவதாக, ஆட்சியர்தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேரூராட்சிக்கு எவ்வித தகவலும் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x