Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM

காவல் நிலையத்தை 20 நாட்களுக்கு தூய்மைப்படுத்த வேண்டும் : கைதான குட்கா வியாபாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

திருச்சி

குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர், காவல் நிலையத்தை 20 நாட்களுக்கு தூய்மைப்படுத்த வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்ட எஸ்பியின் தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவெறும்பூரில் டீ கடையில் குட்கா விற்பனை செய்த சுருளிகோயில் தெருவைச் சேர்ந்த ரவிக்குமாரைப் பிடித்த போலீஸார், இவரிடம் இருந்து ரூ.4,500 மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 10-வது தெருவில் உள்ள காளியம்மாள் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் ரூ.31,140 மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் நாகராஜன் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் (27) மற்றும் காளியம்மாள் (60) ஆகியோரை கைது செய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்ற(ஜே.எம்.4) நடுவர் குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர். இருவரும் 20 நாட்களுக்கு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கையொப்பமிடுவதுடன், காவல் நிலையத்தை தூய்மைப்படுத்த வேண்டும், அங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x