Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

சமுதாய மாற்றத்துக்கு கல்வி அவசியம் : ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பேச்சு

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கிய கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார். அருகில் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர்.

ராமநாதபுரம்

ஒரு சமுதாயத்தை மாற்றுவது கல்விதான் என்று ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார் பேசினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சாமி.சத்தியமூர்த்தி வரவேற்றார்.

விழாவில் பாம்பன் அரசு பள்ளி ஆசிரியர் எஸ்.ரவி, ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.சந்தான கிருஷ்ணன், திருவாடானை அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் ஏ.ஆல்பர்ட் மனோகரன், கலையூர் அரசு பள்ளி ஆசிரியர் பி.நிர்மலாதேவி, வாணி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் எஸ்.பரமேஸ்வரன், சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை பி.டார்த்தி கரோலின், புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.செங்கோல் திரவியம், க.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை எம்.முனீஸ்வரி, ராமநாதபுரம் புனித சூசையப்பர் பள்ளி ஆசிரியர் ஐ.ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் வழங்கிப் பேசியதாவது:

குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதைவிட, எனது பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.ஒரு சமுதாயத்தை மாற்றுவது கல்விதான். நமது மாவட்டத்தில் 97 சதவீத ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு.புனிதம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x