Published : 04 Sep 2021 03:17 AM
Last Updated : 04 Sep 2021 03:17 AM

போலி கல்விச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்த - 19 ஊராட்சி செயலர்கள் கண்டுபிடிப்பு :

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 247 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 240 கிராம ஊராட்சிகளில் செயலாளர்கள் நிர்வாகங்களை கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த கிராம ஊராட்சிச் செயலர்கள் பலர் போலியான கல்விச் சான்றுகளைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அவர்கள் அளித்த கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை குறித்து பள்ளிக்கல்வி துறையின் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கல்விச் சான்றுகளில் 209 பேரின் சான்றுகள் உண்மையானது என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 31 பேரின் சான்றுகளில் முதற் கட்டமாக 19 பேரின் சான்றுகள் போலியானது என தெரியவந்துள் ளது. இதையடுத்து, போலி சான்றுகள் கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காட்பாடி ஒன்றியத் தில் புத்தூர், குடியாத்தம் ஒன்றியத் தில் மோர்தானா, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பரவக்கல் மற்றும் பாலூர் ஊராட்சி செயலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தற்போதைய கால கட்டத்தில் அரசுப் பணியில் சேருபவர்களின் கல்விச் சான்றுகளின் மெய்த் தன்மையை ஆய்வு செய்த பிறகே பணி ஆணைகள் வழங்கப்படுகின் றன. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு அதுபோன்ற நடைமுறை இல்லாத நிலையில் சில மாதங் களுக்கு முன்பு மாநில அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், வேலூர் மாவட்டத்தில் 232 பேரின் கல்விச் சான்றுகளின் ஆய்வில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் பட்டியல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 பேர், காட்பாடி ஒன்றியத்தில் 10 பேர் என மொத்தம் 15 பேரை பணியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x