Published : 03 Sep 2021 03:15 AM
Last Updated : 03 Sep 2021 03:15 AM

திருப்பூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க - நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல் :

திருப்பூரில் அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியை தொடங்க நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுகூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றும், திருப்பூர் அரசுக் கல்லூரிகளில் எம்.பில்., பி.எச்டி உள்ளிட்ட உயர் ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

பின்னலாடைத் தொழிலை மையமாகக் கொண்டு, சிறு, குறு தொழில்கள் ஏராளமாக இருக்கக்கூடிய திருப்பூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே இங்கு அரசு பொறியியல் கல்லூரியையும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியையும் தொடங்கு வதற்கு தமிழக அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.

செப்.1-ம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து பகுதிகளுக்கும் பொதுவான நடைமுறை பின்பற்றப்படுவது மட்டும் போதுமானதல்ல, மற்ற பகுதிகளை விட தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அங்குள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், அனைத்து வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் மத்திய அரசு தமிழகத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x