Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல விடாமல் தடுக்கும் - வனத்தோட்டக் கழகத்தினரை கண்டித்து மறியல் :

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நீர்நிலைகளுக்கு மழைநீரை செல்லவிடாமல் தடுக்கும் வனத்தோட்டக் கழகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 76 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அரிமளம் பகுதியில் வனத்தோட்டக் கழகத்துக்கு சொந்தமான யூக்கலிப்டஸ் காட்டில் மரங்களுக்கு இடையே மழை நீரை தேக்குவதற்காக வாய்க்கால்களும், அதிக உயரத்தில் வரப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், காட்டுப் பகுதியில் இருந்து குளம், காண்மாய்களுக்கு மழை நீர் வருவது தடைபடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், பாசனமும் பாதிக்கப்படுகிறது. எனவே, வாய்க்கால் அமைப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக திருமயம் வட்டாட்சியர் பிரவினாமேரி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து, அரிமளத்தில் பசுமை மீட்புக் குழுவினர், மரம் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, மரம் ஆர்வலர்கள் தங்க.கண்ணன், சி.மணிகண்டன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மேலும், வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x