Published : 01 Sep 2021 03:19 AM
Last Updated : 01 Sep 2021 03:19 AM

பெண் தற்கொலை வழக்கில் : தாய், மகன் உட்பட 5 பேர் கைது :

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல். இவரது மகள்கள் பாரதி(27), சங்கீதா(22). இவர்கள் இருவரும், கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக சேத்துப்பட்டில் உள்ள இனிப்பு கடையில் சங்கீதா பணி செய்து வருகிறார்.

சங்கீதா கடந்த மாதம் 22-ம் தேதி கடைசி பேருந்தை தவறவிட்டதால், கடை ஊழியர் உதவியுடன், அவரது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் திரும்பி சென்ற ஊழியரை, அதே கிராமத்தைச் சேர்ந்த காந்த்(18), கணபதி(26), பிரபு(23), விஜி(21) ஆகியோர் வழிமடக்கி சங்கீதா மற்றும் பாரதியை குறித்து தவறாக பேசியுள்ளனர்.

இது குறித்து கடை ஊழியர் மூலம் இருவருக்கும் தெரிய வந்ததால், கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் முறையிட்டுள்ளனர். அதன்பேரில் 4 இளைஞர்களையும் அழைத்துஅவர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திர மடைந்த காந்த்தின் தாய் எல்லம்மாள்(40), வீடு தேடி சென்று கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 2 பெண்களையும் அவதூறாக பேசி யுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பாரதி, தனது உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வடவணக்கம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எல்லம்மாள், அவரது மகன் காந்த், கணபதி, பிரபு, விஜி ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x