Published : 30 Aug 2021 03:15 AM
Last Updated : 30 Aug 2021 03:15 AM

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு உடல் ஆரோக்கியம் குறித்து - விழிப்புணர்வு சைக்கிள் பயண குழு ஈரோடு வருகை :

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு சைக்கிள் பயண குழுவினர் ஈரோடு வந்தனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மக்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை 2800 கிலோ மீட்டர் தூரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்) சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த ஊர்வலம் 60 போலீஸாருடன் கடந்த 22-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று முன்தினம் மாலை ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர்கள் ராஜேஷ், முகமதுபையாஸ் ஆகியோர் தலைமையில் சைக்கிள் பேரணியாக வந்த போலீஸாரை என்.சி.சி. மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, எஸ்பி சசிமோகன், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கொங்கு பொறியியல் கல்லூரியில் தங்கிய போலீஸார், நேற்று காலை விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினர். விழிப்புணர்வு ஊர்வலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக டெல்லி ராஜ்கோட்டிற்கு காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x