சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை கொன்று : கிருஷ்ணகிரியில் புதைத்த 6 பேர் கைது :

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை கொன்று : கிருஷ்ணகிரியில் புதைத்த 6 பேர் கைது :
Updated on
1 min read

பண விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை கொலை செய்து கிருஷ்ணகிரி அருகே புதைத்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜனரஞ்சன் பிரதான் (48). ஆடிட்டரான இவர் தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த 26-ம் தேதி சென்னையில் இருந்து வேலூருக்கு காரில் வந்துள்ளார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில் வந்துள்ளார்.

அன்று இரவு 10 மணியளவில் ஜனரஞ்சன் பிரதான் தன் மனைவி பூர்ணிமாவின் (38) செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது, “வேலூருக்கு வந்த பணி முடிந்து விட்டதாகவும், மறுநாள் கிருஷ்ணகிரியில் வேலை இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி ஜனரஞ்சன் பிரதானின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பூர்ணிமா, கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் நீண்ட நேரம் போனை எடுக்காமல் இருந்துள்ளனர். பின்னர் போனை எடுத்த அவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளனர்.இதனால், சந்தேகம் அடைந்த பூர்ணிமா 28-ம் தேதி கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

பண விவகாரத்தில் ஜனரஞ்சன் பிரதானை, கிருஷ்ணகுமார் மற்றும் சபரீஷ் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்து அவரது உடலை சாமல்பட்டி அருகே ஒரு மாந்தோப்பில் புதைத்ததாக கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இதனிடையே,நேற்று எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில், டிஎஸ்பி-க்கள் சரவணன், தங்கவேல், அலெக்சாண்டர், கிருத்திகா மற்றும் போலீஸார் சாமல்பட்டி அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு சென்றனர்.அங்கு ஜனரஞ்சன் பிரதான் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோர் காட்டினர். இதையடுத்து, புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி ஜனரஞ்சன் பிரதான் உடலை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in