Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM

பல்லடம் அருகே கார் ஓட்டுநர் கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பம் - இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட் கடத்தல் கும்பல் சிக்கியது : உடந்தையாக இருந்த கோவை மாநகர காவலர் உட்பட மூன்று பேர் கைது

திருப்பூர்

பல்லடம் அருகே கார் ஓட்டுநர் கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாக்யவதி (60). இவரது வீட்டில் குடியிருப்பவர் சக்தி (எ) மகேஸ்வரன் (26). கடந்த 26-ம் தேதி தனது காரை, தாராபுரத்திலுள்ள மகள் வீட்டுக்கு ஓட்டிச் செல்ல மகேஸ்வரனை அழைத்துள்ளார். அன்றைய தினம் மதியம் மகேஸ்வரன், பாக்யவதியுடன் ஊர் திரும்பியுள்ளார். அப்போது மகேஸ்வரனின் நண்பர் அழகர்சாமி அலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல்லடம் - கோவை சாலை பெரும்பாளி அருகே 3 சொகுசு கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், மகேஸ்வரனை கத்தி முனையில் கடத்தியது. இதுதொடர்பாக பாக்யவதி அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேற்கு மண்டல டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்.பி.ஆகியோர் பல்லடம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸார் கூறும்போது, "மகேஸ்வரன் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக, ஏற்கெனவே, சிவகங்கையில் கடந்த 25-ம் தேதி வீரமணிகண்டன் (28), இளையான்குடியை சேர்ந்த அழகர்சாமி ஆகியோரை அந்த கும்பல் கடத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பல்லடம் அருகே கடத்தப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து தப்பினர். மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக விவசாய அணி செயலாளர் குட்லக் ராஜேந்திரன் என்பவரிடம் மகேஸ்வரன் வேலை செய்து வந்தார். இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட்களை கடத்திவரும் செயலுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

ஓராண்டுக்கு முன் தங்க பிஸ்கட் பரிவர்த்தனையின்போது, ஐந்து கிலோ பிஸ்கட்களை இலங்கையில் இருந்து மகேஸ்வரன் கடத்தி வந்துள்ளார். அப்போது, ராமநாதபுரம் பகுதியில் காக்கி உடையில்இருந்த நபர்கள் துரத்திய தாகவும், தங்க பிஸ்கட்களை விட்டுவிட்டு தப்பி வந்ததாகவும் ராஜேந்திரனிடம் மகேஸ்வரன் கூறியுள்ளார். இதை அவர் நம்பவில்லை. ராஜேந்திரனிடம் கடத்தல் பணிக்காக முதலீடு செய்த யாசர் அராபத் (34), முகமது ரிஸ்வான் (31) ஆகியோர் தங்க பிஸ்கட்களை கேட்டதால், அவர்களிடம் மகேஸ்வரனை ராஜேந்திரன் ஒப்படைத்துள்ளார். ஒரு வாரம் அவர்களின் பிடியில் இருந்த மகேஸ்வரன் அங்கிருந்து தப்பினார். பின், திருப்பூர் அம்மாபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

மகேஸ்வரனிடமிருந்து தங்க பிஸ்கட்களை மீட்க, தங்களுக்கு தெரிந்த காவலர் ராஜேஷ்வரன், குட்லு, அன்பு, கார்த்தி, பாண்டி மற்றும் சிலருடன் கடத்தல் திட்டத்தை முகமது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் தயார் செய்துள்ளனர். முதலில் மகேஸ்வரனின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள, வீரமணிகண்டன் மற்றும் அழகர்சாமி ஆகியோரை கடந்த 25, 26-ம் தேதிகளில் கடத்தியுள்ளனர்.

இந்த கடத்தலில் ஈடுபட்டதாக முகமது ரிஸ்வான், யாசர் அராபத் மற்றும் குற்றச்சம்பவத்துக்கு துணைபுரிந்த கோவை மாநகரில்பணிபுரியும் காவலர் ராஜேஷ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சிலரை தேடி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x