Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

நீலகிரி மாவட்டத்தில் 30-ம் தேதி கடையடைக்க முடிவு :

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தப்படவில்லை எனக் கூறி நகராட்சி நிர்வாகம் 1395 கடைகளுக்கு ‘சீல்’வைத்தது. இதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனால், 3 நாட்களாக நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்டம்முழுவதும் உள்ள வியாபாரிகள் நேற்று உதகையில் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், உதகை மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கே.ஏ.முஸ்தபா ஆகியோர் கூறும்போது,‘‘வியாபாரிகளின் பொருட்களை வெளியே எடுக்கவிடாமல் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர். ரூ.5 கோடிமதிப்பிலான பொருட்கள் கடைகளில் இருப்பு உள்ளன. உதகை நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்குமொத்தமாக ரூ.35 கோடி வாடகை நிலுவைஉள்ளது. இதில், அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான கடைகள் ரூ.5 கோடியும், மார்க்கெட்டின் வெளிப்புறங்களில் உள்ள கடைகள் ரூ.10 கோடியும் வாடகை நிலுவைவைத்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ளாட்சிக் கடைகள் வாடகை அபரிமிதமாக உயர்த்தப்பட்டதால், வாடகையைக் குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தினோம். இதுதொடர்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. வாடகை உயர்வு பிரச்சினையை தீர்க்க முதல்வர் உறுதியளித்துள்ளார். அரசு புதிய வாடகை உயர்வை நிர்ணயித்தால், அந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தி விடுவர். உதகை நகராட்சிஆணையர், தன் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்ப 1000 நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைத்துள்ளார். கரோனா பரவல் மற்றும்சட்டப்பேரவைக் கூட்டத்தால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க முடியவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால், அவரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து, உள்ளாட்சி கடைகள் வாடகை பிரச்சினை குறித்து முறையிடுவார்.

நகராட்சி ஆணையரை மாற்றக் கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வரும் 30-ம் தேதி மாவட்டம் முழுவதும்கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இப்பிரச்சினை தொடரும் பட்சத்தில் வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினரோடு சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x