Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

கொடிவேரி பாசனப்பகுதியில் 31 நெல் கொள்முதல் மையங்கள் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை (கொடிவேரி) பாசனப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்முதல் செய்ய, 31 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கூறியதாவது:

கொடிவேரி பாசனப் பகுதியில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் மையங்களைப் பொறுத்தவரை, அந்தந்த பகுதிகளில் அறுவடை தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, வெவ்வேறு தேதிகளில் செயல்பாட்டுக்கு வருகின்றன. அதிக நெல் பயிரிடப்பட்டுள்ள கிராமங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களும் திறக்கப்படவுள்ளன.

இதன்படி, இன்று (28-ம் தேதி) முதல் ஏளூர், புது வள்ளியம்பாளையம், கரட்டடிபாளையம், நஞ்சை புளியம்பட்டி, கள்ளிப்பட்டி ஆகிய இடங்களிலும், செப்டம்பர் 1-ம் தேதி முதல் காசிபாளையம், புதுவள்ளியம்பாளையம் (2), நஞ்சை புளியம்பட்டி (2), தூக்கநாயக்கன் பாளையம், கள்ளிப்பட்டி (2), நஞ்சகவுண்டன் பாளையம் ஆகிய இடங்களிலும் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் கள்ளிப்பட்டி (3), கூகலூர் (1), நஞ்சகவுண்டன்பாளையம் (3), புதுவள்ளியம்பாளையம் (3), புதுக்கரைப்புதூர், கரட்டடிபாளையம் (2), மேவாணி, ஏளூர் (2), நஞ்சைபுளியம்பட்டி (3), சவுண்டப்பூர் (2), கருங்கரடு ஆகிய இடங்களிலும், 10-ம் தேதி முதல் கூகலூர் (2), நஞ்சகவுண்டன்பாளையம் (4), புதுக்கரைப்புதூர் (2), பி.மேட்டுப்பாளையம், பொன்னாச்சிப்புதூர், பொலவகாளிபாளையம் ஆகிய இடங்களிலும் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது.

இம்மையங்களில் ‘ஏ’ கிரேடு ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1958 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1918 வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லினை விற்பனை செய்ய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்ய, கிராம நிர்வாக அலுவலர் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2 ஆகிய ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x