Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

`மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து நாட்களிலும் வேலைவழங்க வேண்டும். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறைபணிகளில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.குமாரசுவாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், தாலுகா செயலாளர் பி. வரகுணன், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன் ஆகியோர் பேசினர். இதுபோல், நாங்குநேரி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மானூர், ராதாபுரம் ஆகிய இடங்களிலும், வருவாய்த்துறை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவில்பட்டி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.முத்துமாலை, நகரத் தலைவர் ஜே.அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

தென்காசி

தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத்தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x