Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை : பிஏபி பாசன விவசாயிகள் வலியுறுத்தல்

தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்தநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளகோவில் பிஏபி கடைமடை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பிஏபி கடைமடை விவசாயிகளுக்கு முறையான தண்ணீர் கிடைப்பதில்லை. வணிகப் பயன்பாட்டு ஆயக்கட்டு பகுதிகளை நீக்கவேண்டும். தண்ணீர் திருட்டை தடுத்தாலே, கடைமடை பகுதிக்கு போதியஅளவில் தண்ணீர் கிடைக்கும். அதேபோல கோழிப்பண்ணை அதிபர்கள், தென்னை மட்டை அதிபர்கள் தங்களது ஆலைகளுக்காக தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது.

தென்னை மட்டை அதிபர்கள், தண்ணீரை பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நிலத்தில் விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்களின் மின் இணைப்பை துண்டித்து, குழாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். இதனால் 7 நாள் அடைப்பு மற்றும் 7 நாள் திறப்புஎன கடைமடைக்கும், பிஏபி தண்ணீர் கிடைக்கும்.

இந்த நடவடிக்கையை, தொய்வின்றி தொடர்ச்சியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வட்டமலை, உப்பாறு அணைகளுக்கு தண்ணீர் கொண்டுவந்தால், அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு மனுவில்தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x