Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

ராமநாதபுரத்தில் - இளைஞர் வெட்டிக் கொலை : ஆள் வைத்துக் கொன்ற அண்ணி கைது

ராமநாதபுரம் அருகே மச்சினனை ஆள் வைத்து கொலை செய்த அண்ணியை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு கொடைக்கான் வலசையைச் சேர்ந்த முத்து மகன் ராஜேந்திரன் (29). கொத்தனாரான இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது மூத்த சகோதரர் செல்வம் வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில், செல்வத்தின் மனைவி சத்யாவுக்கும், ராஜேந்திர னுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், சத்யா ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேறு சிலருடனும் நெருங்கிப் பழகினார். அதை ராஜேந்திரன் கண்டித்ததால் அவருக்கும் சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் பணம் வாங்க வேண்டியிருப்பதாக சத்யா கூறியதால், அவரை தனது மோட்டார் சைக்கிளில் ராஜேந்திரன் அழைத்துச் சென்றார். கிழக்கு கடற்கரைச் சாலையில் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த சிலர் ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். கேணிக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில், சத்யாவும், அவரோடு பழகியவர்களும் சேர்ந்து திட்டமிட்டு ராஜேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது. சத்யாவைக் கைது செய்த போலீஸார் மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x