Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

அவிநாசிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் அவதி :

அவிநாசிபாளையம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில், பேருந்துக்கு காத்திருக்கும் பகுதியில் மழைநீர் தேங்குவதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தின் முக்கியபோக்குவரத்து பகுதி தாராபுரம்சாலையிலுள்ள அவிநாசிபாளையம். கோவை, கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்குமான, திருப்பூர் மாவட்டத்தின் பிரதான இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இங்கு வந்து பேருந்து ஏறுவது வழக்கம். இந்நிலையில், அவிநாசிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் மழைநீர் தேங்குவதால், பேருந்தில் ஏற முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அங்கு காத்திருந்த பயணிகள் கூறும்போது, "பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை வசதி இல்லை. கரூர், திருச்சியில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் திரும்பி நிற்கும் இடம், தாராபுரம், மதுரை செல்லும் பேருந்துகள் நிற்கக் கூடிய பகுதி என்பதால் பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன் நிழற்குடை இல்லாத இடத்தில் நிற்கிறோம்.

அதேபோல, முதியவர்களின் நிலைமையும் கவலை அளிக்கிறது. இந்நிலையில், மழை பெய்யும்போது பேருந்துகள் நிற்கும் பகுதியில் தண்ணீர் தேங்குவதால், அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, அந்த இடத்தில் தண்ணீர் தேங்காதவாறு, சாலையை சீரமைத்தால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பயனடைவர். இதுகுறித்து தொடர்புடைய ஊராட்சி மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x