ஈரோடு மாநகராட்சியில்  ஒரு வாரத்தில் 35 டன் கழிவு அகற்றம் :

ஈரோடு மாநகராட்சியில் ஒரு வாரத்தில் 35 டன் கழிவு அகற்றம் :

Published on

ஈரோடு மாநகராட்சியில் ஒரு வாரத்தில் 35 டன் குப்பை மற்றும் சாக்கடைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.

பருவமழைக்காலம் தொடங்குவதையொட்டி, ஈரோடு மாநகராட்சியில் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக 4 மண்டலங்களில் 16 இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவுப் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி நடந்து வருகிறது. சுகாதார ஆய்வாளர், உதவி சுகாதார ஆய் வாளர் தலைமையில் சாக்கடை அடைப்புகளை நீக்குதல், தூர்வாருதல், குப்பை அகற்றுதல், மழை நீர் செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மரக்கிளைகள், தேவையின்றி வளர்ந்துள்ள புதர்களைஅகற்றுதல் போன்ற பணிகள் நடந்துவருகிறது.

மேலும், மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து வடிகால்களை அமைத்தல், பொதுமக்களுக்கு டெங்கு பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரே நேரத்தில் 100 பணியாளர்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதால், முழுமையாக ஒவ்வொருபகுதியும் சுத்தப்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 16 இடங்களில் ‘மாஸ் கிளினிங்’ மேற்கொள்ளப்பட்டு, 35 டன் குப்பை கழிவுகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in