Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

திருக்காலிமேடு அருகே உள்ள அலாபாத் ஏரியில் - குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு :

காஞ்சிபுரம்

திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரியில் மான்கள் கூட்டமாக தங்கியுள்ள நிலையில் ஏரியில் குப்பை கொட்டப்படுவதால், இயற்கை சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அலாபாத் ஏரி உள்ளது. நத்தப்பேட்டை ஏரி, மஞ்சள் நீர் கால்வாயின் உபரிநீர் அலாபாத் ஏரியில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், நீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் மஞ்சள் நீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியதாலும் ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

எனினும், மழைக்காலங்களில் ஏரியில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்நிலையில், ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்த்தியாக உள்ளன. மேலும், அருகில் உள்ள நத்தப்பேட்டை ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுவதாலும், வெளிநாடு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் ஏரியில் தஞ்மடைந்துள்ளன. இப்பறவைகள் அலாபாத் ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன.

அலாபாத் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளி மான்கள் சுற்றித் திரிந்தன. இதையடுத்து, மான்கள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏரிக்கரைகளில் வனத்துறையின் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

தற்போது இந்த ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. அதனால், குப்பை கொட்டுவதை தடுக்கவும் கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, ``அலாபாத் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரியின் கரையை பலப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தன.

அலாபாத் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளி மான்கள் சுற்றித் திரிந்தன. இவற்றை பாதுகாக்க, ஏரிக்கரைகளில் வனத்துறையின் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x