Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

நிதிநிலை அறிக்கையால் ஏமாற்றம் : பென்சனர் கூட்டமைப்பு அறிக்கை

தமிழகத்தில் 70 வயது நிறைவடைந்த நபர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் போன்ற சலுகைகளை நிதிநிலையில் அறிவிக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பென்சனர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில பாரத மூத்தகுடி மக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அ.ராஜகண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் 70 வயது நிறைவடைந்த பென்சனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்சன், 2021 ஜூலை 1-ம் தேதிமுதல் அகவிலைப் படி உயர்வு, பங்களிப்பு பென்சன் ரத்து செய்து வரையறுக்கப்பட்ட பென்சன் தொடரும் என்பன உள்ளிட்டவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்தோம். இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது, வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

கடந்த காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும்போது, தமிழக அரசும் அறிவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. கரோனா அசாதாரண சூழ்நிலையால் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மாறாக 2022-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், பென்சனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x