

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு சார்பில் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில், மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சொக்கநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் தங்கராசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளான, ஓய்வூதிய உயர்வை நிறைவேற்ற வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு என தனி சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரியில், அரசு சார்பில் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் முதியோருக்கு இலவச பயண சலுகையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.