Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
சேலம் அருகே யானை தந்தங் களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவரை கோவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பகுதியைச் சேர்ந்தவருக்கு சேலத்தில் இருந்து யானை தந்தத்தை கடத்திச் சென்று விற்பனை செய்வதாக கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கோவை வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கோவையைச் சேர்ந்த ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்து இருவர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கோவை வனத்துறை அதிகாரிகள் நேற்று (20-ம் தேதி) சேலம் வந்தனர். யானை தந்தம் விற்பனை செய்ய முயன்றவர்களிடம், கோவை வனத்துறையினர் வியாபாரிகள் போல செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். ஒரு தந்தம் ரூ.10 லட்சம் என இரண்டு தந்தங்களுக்கு விலை பேசி, வாழப்பாடி டோல் கேட் பகுதிக்கு வரவழைத்தனர்.
இரண்டு யானை தந்தங்களுடன் காரில் வந்த இருவரை, கோவை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். கோவையில் பிடிபட்டவரையும், சேலத்தில் பிடிபட்ட இருவர் என மூவரையும் கோவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை பிடிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் குறித்த விவரங்களை சிக்கிய மூவரிடமும் விசாரித்து வருகிறோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT