Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

உலக தடகளப் போட்டியில் பங்கேற்கும் சமீஹா பர்வீனுக்கு அமைச்சர் வாழ்த்து :

சென்னை

போலந்து நாட்டில் காதுகேளாதோருக்கான உலக தடகளப் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமீஹா பர்வீனுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

காதுகேளாதோருக்கான உலக தடகளப் போட்டி ஆக.23 முதல் 28-ம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமிதமான செய்தியாகும். வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும், கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்றுவரும் வீராங்கனை சமீஹா பர்வீன், இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம்.

லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா, தமிழக வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். முதல்வரின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழக விளையாட்டுத்துறைக்கு, சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அங்கீகாரமாக இருக்கும். சமீஹா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற முதல்வர் சார்பாக வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x