

அரக்கோணம்: அரக்கோணம் தலைமை அஞ்சலகம் வரும் திங்கட் கிழமை முதல் புதிய முகவரியில் இயங்க உள்ளது என அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அரக்கோணம் அரசு மருத்துவமனை அருகில் அரக்கோணம் தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. தற்போது, அந்த கட்டிடம் முழுவதும் புனரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. எனவே, வரும் திங்கட்கிழமை (23-ம் தேதி) முதல் அரக்கோணம் தலைமை அஞ்சலகம், எண்.61, முதல் டவுன் ஹால் தெரு, பெருமாள் இன்டேன் கேஸ் சர்வீஸ் எதிரில் செயல்பட உள்ளது. அங்கு, தபால் பட்டுவாடா, அஞ்சல் சேமிப்பு திட்டங்கள், பார்சல், துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட அஞ்சல் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் இனி புதிய கட்டிடத்தில் வழங்கப்படும். புதிய இடத்தில் செயல்படும் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் எல்லா சேவைகளையும் பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.