Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM

தட்டப்பாறை- மீளவிட்டான் 2-வது ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க அனுமதி :

மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு இரட்டை ரயில் பாதைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு, பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 2-வது ரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் கடந்த 14-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பிறகு, புதிய ரயில் பாதையில் முதலில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயிலை இயக்கலாம் என்றும், தொடர்ந்து படிப்படியாக ரயிலின் வேகத்தை 100 கி.மீ வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ் பாபு ரயிலில் (டிராக் ரெக்கார்டிங் கார்) பயணம் செய்து, அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்திய பணிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என, நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இனிமேல் தூத்துக்குடிக்கு வரும் ரயில்கள் புதிய பாதையிலும், தூத்துக்குடியில் இருந்து செல்லும் ரயில்கள் பழைய ரயில் பாதையிலும் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x