

குலசேகரன்பட்டினம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவரது மனைவி பேச்சியம்மாள் (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அருணாச்சலம் காயல்பட்டினத்தில் உள்ள புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த பேச்சியம்மாள், தனது கணவர் கையில் வைத்திருந்த கம்பியை பறித்து அவரை அடித்துள்ளார். பேச்சியம்மாளின் தாயார் சுடலை வடிவும் அங்கு இருந்துள்ளார். மயங்கி கிடந்த அருணாச்சலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து பேச்சியம்மாள் மற்றும் அவரது தாயார் சுடலை வடிவு ஆகியோரை கைது செய்தனர்.