Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM

குக்கிராமங்களுக்கும் சாலை வசதி: கிருஷ்ணகிரி ஆட்சியர் உறுதி :

சாலை வசதியில்லாத குக் கிராமங் களுக்கு, பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டத்தின் கீழ் சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட பணிகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 2000-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சாலை வசதியில்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது. 3 கட்டங்களாக செயல் படுத்தப்படும் இத்திட்டத்தில், தற்போது 3-ம் கட்டத்தில் குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

அதன்படி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், ரூ.38.81 கோடி மதிப்பீட்டில் 69.035 கி.மீ நீளமுள்ள 21 சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 15.285 கி.மீ நீளமுள்ள 6 சாலைப் பணிகள் ரூ.7.733 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

சாலை வசதி இல்லாத குக்கிராமங்களை அதிவிரைவில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் இணைப்பதே முக்கிய நோக்கமாகும். பிரதமமந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்அனைத்து பணிகளுக்கும் 3 அடுக்கு தரக்கட்டுப்பாட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஒப்பந்ததாரர் ஒவ்வொரு சிப்பத்திற்கும் தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காக தரக்கட்டுப்பாட்டு சோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட அளவிலான தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றியக்குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x