தி.மலையில் நடந்த சுதந்திர தின விழாவில் - ரூ.18.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்

சுதந்திர தின விழாவில் புறாக்களை பறக்கவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் எஸ்.பி., பவன்குமார். 	படம்: இரா.தினேஷ்குமார்.
சுதந்திர தின விழாவில் புறாக்களை பறக்கவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் எஸ்.பி., பவன்குமார். படம்: இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

தி.மலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் 11 பேருக்கு ரூ.18.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்.

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா திருவண்ணா மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடை பெற்றது. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆட்சியர் பா.முருகேஷ் மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு வெண் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

இதையடுத்து, 18 பேருக்கு ரூ.18.18 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்.

மேலும், வருவாய்த் துறை, காவல்துறை உட்பட 35 துறைகள் மற்றும் பிரிவுகள் சார்பில் சிறப்பாக பணியாற்றியதாக 710 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை ஆட்சியர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் என ஐந்து பேருக்கு சால்வை அணிவித்து ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி ஆட்சியர் ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் உள்ள காந்தி சிலைக்கு ஆட்சியர் பா.முருகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in