விவசாயியை கொன்ற 6 பேருக்கு ஆயுள் சிறை :

விவசாயியை கொன்ற 6 பேருக்கு ஆயுள் சிறை :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே இடத்தகராறில் விவசாயியை கொன்ற வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் அருகே ஏ குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தன் வீட்டின் அருகே இருந்த புறம்போக்கு இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தன் ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 7.10.2016 அன்று இரவு ஆறுமுகம், அவரது மகன் அய்யனார் (43) மற்றும் உறவினர்கள் ஆனந்தன், சிவகண்டன் ஆகியோர் பைக்கில் வரும்போது, வெங்கடாசலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆறுமுகம் தரப்பினரை தாக்கியுள்ளனர். அப்போது அய்யனாரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் , குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாசலம் (61), சௌந்தரராஜன் (29), குமார் (38), செல்வம் (36), குமரவேல் (26), அஜீத் (22) ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in