Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

உதகையில் கடன் தொல்லையால் விரக்தி - குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை :

உதகை

:நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்லிமந்து அணையில் கடந்த சில ஆண்டுகளாக பைரவன் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, நகராட்சிக்கு சொந்தமான மார்லிமந்து பகுதியிலேயே குடியிருப்புஒதுக்கப்பட்டது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், பணி ஓய்வு பெற்றதால் மைசூரில் பைரவன் வசித்து வந்தார். பைரவனின் மகன் சந்திரன்(45), அவரது மனைவி கீதா (35), மகள் ரக் ஷிதா (16), மகன் விஸ்வந்தர் (12) ஆகியோர் அந்த குடியிருப்பிலேயே வசித்து வந்தனர். சந்திரன் 4 மாடுகளை வளர்த்துபால் வியாபாரம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 மாடுகள்நோயால் உயிரிழந்தன. மற்ற 2 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தும், போதியவருமானம் இல்லாமல் சந்திரனின் குடும்பம் தவித்தது. உதகை அருகே கோழிப்பண்ணை பகுதியில் ஓர் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, சந்திரன் விவசாயம்செய்து வந்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் தொல்லையில் சிக்கினார்.

கடனை திருப்பி கேட்டு பலரும் தொந்தரவு செய்ததால் மனமுடைந்த சந்திரன், தனது மகன் மற்றும் மகளுக்கு உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதன் பின்பு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2 நாட்களாக சந்திரனின் வீட்டுக் கதவு திறக்கப்படாததாலும், மாடுகள் சத்தமிட்டுக்கொண்டே இருந்ததாலும் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, கட்டிலில் இரண்டு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். தம்பதி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின்பேரில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், உதகை காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், ‘ஜி1’ காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கந்துவட்டி கும்பல் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, கந்துவட்டி நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x