Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க மானியம் - விவசாயிகள் ஆவணங்கள் பெற சிறப்பு முகாம்கள் :

திருப்பூர்

பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகள் நூறு சதவீத மானியமும், பிற விவசாயிகள் 75 சதவீத மானியமும் பெற்று பயனடைய, தேவையான ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக பரப்புசாகுபடி செய்ய உதவும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் (ஒரு துளி நீரில் அதிக விளைச்சல்),வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம்மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், தண்ணீர் மற்றும் மண் மாதிரி முடிவுகள், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன், வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறையில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். சிறு,குறு விவசாயிக்கான சான்று உட்பட மேற்கூறப்பட்ட ஆவணங்கள் துரிதமாக பெறும் வகையில், மாவட்டம் முழுவதும் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, அவிநாசி வட்டாரத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், ஊத்துக்குளி வட்டாரங்களில் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் ஆகஸ்ட் 10 (நாளை), 12-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தாராபுரம், வெள்ளகோவில் வட்டாரங்களில் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், மூலனூர், உடுமலை வட்டாரங்களில், தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் வரும் 11, 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் இந்த முகாமில், தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங் களுக்கு, அவிநாசி - 9843774567, தாராபுரம் - 9442434863, குடி மங்கலம் - 9965513265, காங்கயம்-9443475398, குண்டடம் - 9894028768, மடத்துக்குளம் - 94437 14513, மூலனூர் - 9486412102, பல்லடம் - 9442844942, பொங்கலூர் - 6383384167, திருப்பூர் - 9843774567, உடுமலை - 9944557552, ஊத்துக்குளி - 9344911511, வெள்ளகோவில் - 9865132354 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x