Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

மணவாளநகர்-திருமழிசை நெடுஞ்சாலையில் - 18 கி.மீ. தொலைவுக்கு 15 வேகத் தடைகள் அமைப்பு : விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில்இருந்து திருமழிசைக்குச் செல்ல மாநில நெடுஞ்சாலை உள்ளது. சுமார் 18 கி.மீ. தொலைவு கொண்ட இச்சாலையில் மொத்தம் 15 இடங்களில் வேகத் தடைகள் உள்ளன.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘‘அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக வளைவுகள், சாலையை ஒட்டி பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்தான் வேகத் தடைகள் அமைக்கப்படும்.

ஆனால், இச்சாலையில் 15 வேகத் தடைகள் உள்ளன. மணவாளநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 வேகத் தடைகளும், வெங்கத்தூர், அரண்வாயல் இடையே 100 மீட்டர் இடைவெளியில் 2 வேகத் தடைகளும், மேட்டுக் கண்டிகை, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் 2 வேகத் தடைகளும், நேமம் கல்கி பகவான் கோயில், வெள்ளவேடு, மணம்பேடு, திருமழிசை அரசுப் பள்ளி, ஒத்தாண்டேஸ்வரர் கோயில் மற்றும் தனியார் சர்வதேச பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு வேகத் தடையும் உள்ளன. சராசரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வேகத் தடை என்ற அடிப்படையில் இவை உள்ளன.

வேகத் தடைகள் சாலை விபத்தைத் தடுப்பதற்காக போடப்படுபவை. ஆனால், மணவாளநகர்-திருமழிசை இடையே போடப்பட்டுள்ள அதிகளவு வேகத் தடைகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகளவு விபத்துகள் நிகழ்கின்றன.

எனவே, இச்சாலையில் தேவையில்லா வேகத் தடைகளை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x