Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா :

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பல்வேறு கோலங்களில் எழுந் தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை விழா 10-ம் நாளான நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், பின்னர் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை களும் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெற்றன. இதில், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11-ம் நாள் திருவிழாவான இன்று (ஆக.9) அதிகாலை 5 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சார்த்தி தரிசனமும், பின்னர் பச்சை சார்த்தி அபிஷேகமும், தரிசனமும் நடைபெறுகிறது.

நாளை (ஆக.10) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவு சுவாமி ஆலிலை சயனம் மற்றும் மங்கள தரிசனமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப் பாண்டியன் செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x