Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியாக நீடிப்பு :

ஈரோடு

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் கடந்த 10 நாட்களாக 100 அடியாக நீடித்து வருகிறது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 25-ம் தேதி, அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, நீர் வரத்து முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

பவானிசாகர் அணை விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அணையில் 102 அடி வரை நீரினைத் தேக்கி வைக்கலாம் என்பதால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், நீர் வரத்து குறைவாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் உயராமல், கடந்த 10 நாட்களாக 100 அடியிலேயே நீடித்து வருகிறது.

அணைக்கான நீர் வரத்து பகல் பொழுதில் மிகக்குறைவாகவும், இரவில் சற்று அதிகமாகவும் இருந்து வருகிறது. நேற்று காலை 10 மணியளவில் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 309 கனஅடியாகவும், பகல் 12 மணிக்கு 296 கனஅடியாகவும் இருந்தது. மாலை 6 மணியளவில் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1124 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர் மட்டம் 100.26 அடியாகவும், நீர் இருப்பு 28.93 டிஎம்சியாகவும் இருந்தது.

அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடியும் திறக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x