Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் - தேங்காய்பட்டினத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் : முதல்வரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும்என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அளித்த மனு விவரம்:

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாததால் நுழைவுவாயில் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துவருகிறது. விபத்தால் இதுவரைஇங்கு 9 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இத்துறைமுகத்தில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சீரமைக்க ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

கிள்ளியூர் தொகுதியில் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படும் ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நெய்யாறு இடதுகரைகால்வாயில் 2004-ம் ஆண்டு முதல் நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் கிள்ளியூர், விளவங்கோடு பகுதிவிவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும். தேங்காய்பட்டினம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தேங்காய்பட்டினம்- இரையுமன்துறை இடையே உயர்மட்டப் பாலம் அமைக்கவேண்டும். இதன் மூலம் குறும்பனை முதல் நீரோடித்துறை வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர். 11 கிலோ மீட்டர் தூரம் பயணநேரமும் மிச்சமாகும். மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை சாலை ஒரே சாலையாக இணைக்கப்படும்.

எனவே, இத்திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x