Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் - மறைமலை அடிகளாரின் பேரனுக்கு நிரந்தரப் பணி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவக்குமாரை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடமொழிக் கலப்பின்றி தமிழைதூய நடையில் எழுதியவரும், தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி தமிழை செழுமையாக வளர்த்தவரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செய்து தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்ற தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார்.

அவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பித்து போற்றும் வகையில், கடந்த 1997-ல் அப்போதைய முதல்வர்கருணாநிதி, மறைமலை அடிகளாரின் படைப்புகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கவும், அவரது குடும்பத்தினருக்கு காப்பு நிதி வழங்கவும் ரூ.20 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவித்து, அவருக்கு சிறப்பு செய்தார்.

இத்தகைய சூழலில், மறைமலை அடிகளாரின் இளைய புதல்வர் மறை பச்சையப்பன், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளார் என்பதும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புக்கு பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த இயலாத நிலையில் உள்ளதும் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து, வீட்டுவசதி வாரியத்துக்கு மறை பச்சையப்பன் செலுத்த வேண்டிய பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுவதும் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறை பச்சையப்பனின் மகன் ப.சிவகுமார் தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருவதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், சிறப்பு நிகழ்வாக, சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x