Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

விபத்தில் கார்- மொபெட் எரிந்து சேதம் : முதியவர் உயிரிழப்பு; 2 குழந்தைகள் காயம்

பெரம்பலூர்

திருச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் புனிதன். வழக்கறிஞரான இவர் தனது மனைவி ஷீலாவுடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இளம்பரிதி ஓட்டினார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் அருகே காரை பிரிவு சாலை பகுதியில் கார் வந்தபோது, காரையில் இருந்து தனது பேரக் குழந்தைகள் அஜய் (6) பரணி (3) ஆகியோருடன் மொபெட்டில் வந்த லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த செங்கமலை மகன் பெரியசாமி (60) நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, மொபெட்டும் காரும் மோதிக்கொண்டதில் 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

காரில் இருந்தவர்கள் உடனே வெளியே குதித்து உயிர் தப்பினர். மொபெட்டில் வந்த பெரியசாமி, அவரது பேரன்கள் அஜய், பரணி ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x