பாடாலூர் பகுதியில் -  சின்ன வெங்காயத்தை திருடி  விற்க முயன்றவர் கைது :

பாடாலூர் பகுதியில் - சின்ன வெங்காயத்தை திருடி விற்க முயன்றவர் கைது :

Published on

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர், தனது விவசாய நிலத்தில் அறுவடையான சின்ன வெங்காயத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை விவசாய நிலத்துக்கு செல்வகுமார் சென்றபோது, அங்கிருந்த சின்ன வெங்காய மூட்டை திருடுபோயிருந்தது.

இதையடுத்து, அவர் திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காய மண்டிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு இவருடைய வெங்காய மூட்டையை வேறு ஒரு நபர் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தது தெரியவந்தது. உடனே, அந்த நபரைப் பிடித்து வைத்துக்கொண்டு பாடாலூர் போலீஸாருக்கு செல்வகுமார் தகவல் கொடுத்தார்.

பாடாலூர் போலீஸார் திருச்சிக்குச் சென்று, அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மதுரை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஞானப்பழம் மகன் சரவண பாண்டி(35) என்பதும், கூத்தனூரில் சின்ன வெங்காயத்தை திருடி, திருச்சியில் விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை திருட்டு வழக்கில் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து சின்ன வெங்காய மூட்டை மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in