பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.4,120 கோடிக்கு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு :

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.4,120 கோடிக்கு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு :
Updated on
1 min read

2021-22-ம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்ட வங்கிகளுக்கு ரூ.4,120 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா நேற்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் தெரிவித்தது: பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.4,120 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், விவசாய கடன்களுக்காக ரூ.2,939 கோடி, சிறு, குறு தொழில்களுக்கு ரூ.372 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.782 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.110 கோடி அதிகம். இந்த கடன் திட்ட அறிக்கையின்படி, அனைத்து வங்கிகளும் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டுக்கு 750 பேருக்கு 16 வகையான இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன், முன்னோடி வங்கி மேலாளர் பி.அருள், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் எல்.எஸ்.நவீன்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்றி மைய இயக்குநர் ஜெ.அகல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in