Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் :

கோவை/திருப்பூர்/ உடுமலை /உதகை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர்எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறும்போது ‘‘தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுகஅரசு நிறைவேற்ற வில்லை.

மக்களுக்காக மாநில அரசுதிட்டங்களை செயல்படுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுத்து அதிமுக சார்பில் எந்தநேரத்திலும் திட்டங்களை பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

திருப்பூர்

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். பல்லடம் தொகுதி அதிமுகசட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் குமார் நகரிலும், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கே.என். விஜயகுமார் தலைமையில் அங்கேரிபாளையம் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை

உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள இல்லத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலும், மடத்துக்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையிலும், தாராபுரத்தில் நகர செயலாளர் காமராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போலஉடுமலை, மடத்துக்குளம் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிளை நிர்வாகிகள்பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

உதகை

உதகை,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் 1,500கிளைகளில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உதகையில் மாவட்ட அதிமுக அலுவலகம்முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பால நந்தகுமார், முன்னாள் நகரச் செயலாளர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x